- பணி மையம்
- வெளியுறவு அமைச்சகம்
- வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
- சுஷ்மாஸ்வராஜ் பணி மையம்
- ஸ்வராஜ் வெளிநாட்டு சேவை நிறுவனம்
புதுடெல்லி: வெளியுறவுத்துறை பணி மையத்தின் பெயர் சுஷ்மா ஸ்வராஜ் பணி மையம் என மாற்றம் செய்யப்படவுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. மத்திய பா.ஜ.க அரசு, 2014ம் ஆண்டு மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றதும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக சுஷ்மா ஸ்வராஜுக்குப் பதவி வழங்கப்பட்டது. வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்கள் பலரை மீட்டு தாயகம் திரும்ப வைத்த பெருமை அவருக்கு உண்டு. மேலும், சுஷ்மா சுவராஜ் தனது பதவிக் காலத்தில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு தேவைப்படும் உதவிகளை இந்திய தூதரகம் மூலம் விரைந்து செய்துவந்தார். இன்றைய தொழில்நுட்பத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திய அரசியல் தலைவர்களில் சுஷ்மா முக்கியமானவர். ஆட்சியில் மட்டுமல்லாது பா.ஜ.க.விலும் முக்கிய தலைவராக வலம் வந்தவர் சுஷ்மா.
இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சைப் பலனின்றி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில், டெல்லியில் உள்ள பிரவாசி பாரதிய கேந்திரத்தின் பெயர் சுஷ்மா ஸவராஜ் பவன் என அழைக்கப்பட உள்ளது என வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மரபு மற்றும் பல தசாப்த கால பொது சேவையை கவுரவிக்கும் விதமாக அவரது பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 14ம் தேதி முதல் பிரவாசி பாரதிய கேந்திரத்தின் பெயர் சுஷ்மா ஸ்வராஜ் பவன் என அழைக்கப்படும். இதேபோல், வெளியுறவுத்துறை பணி மையம் இனி சுஷ்மா சுவராஜ் பணி மையம் என அழைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.